இறைவன் அணுக்குள் பேரொளியாக இருக்கிறார் என்று மகான் திருமூலரும் மகான் வள்ளலாரும் தன் பாடலில் நமக்கு தெரிவித்தார்கள்.
சித்தர் மகான் திருமூலர், அட்டமாசித்தி உபதேச படலமாக:
"எம்மை உணர்ந்த யோகியர்கள்
இவற்றை விரும்பார் எனினும் அவர்
தம்மைநிழல்போல் அடைந்து உலகர்க்கு
அனையார் பெருமைதனை உணர்த்துஞ்
செம்மை யுடைய இவையென்னச்
சித்தி யெட்டும் தெளிவெய்தக்
கொம்மை முலையார் அறுவருக்குங்
கொளுத்தினான் எண்குணச்செல்வன்".
இப்பிரபஞ்சம் என்பது சிவத்தின் அங்கம். அணுக்களால் ஆன இப்பிரபஞ்சத்தில், அவனின்றி அணுவும் அசையாது என்றது மெய்ஞ்ஞான அறிவியல். அப்படிப்பட்ட அணுக்களால் ஆன உடல் அணுக்களை, உயிரணுக்களை இறைக் கோட்பாட்டில், இறைநம்பிக்கையில், தவம், சமாதி, வாசியோகம், குண்டலினீ யோகம் போன்றவைகளில் கட்டுண்டு பிண்டத்தின் மூல ஆற்றலை அறியும்போது. அதுவே அண்டசக்தியாய்
விரிந்துள்ளதில் நிலைப்படும்போது, சிவமானத்தின் எண்குணத்தின் அடிப்படையின் வெளிப்பாடே, திருமூலர் கண்ட அட்டமாசித்துக்களாகும்.
பிரபஞ்சத்தில் உள்ள ஜடப்பொருளான
அணுக்களுடனும், அருவ அணுக்களுடனும் தொடர்பை ஏற்படுத்தும் திருமூலரின் யோகஞான முன்னேற்றத்தின் முடிவில், அணுக்களின் பேரணுவான மூலத்தை அறியும் ராஜபாட்டையில் அமைவது அட்டமாசித்துக்கள்.
ஒழுக்கம், அன்பு. அகிம்சை, இறை உணர்வு, வாசியோகம், நுண்ணுடலை வசப்படுத்துவது, தன்னைத்தான் அறிதல், நிறை அறிவைப் பெறுதல் போன்றவைகள் அட்டமாசித்துக்களுக்கு அடிபடைகளாகின்றன.
மகான் வள்ளலார் திரு அருட்பா பாடல்:
"அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பென்றும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே
அன்புரு வாம்பர சிவமே!"
இப்பாடலில் "அன்பென்றும் உயிர்ஒளிர் அறிவே, அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே " அன்பு என்றும் உயிர் ஒளிர் அறிந்து, அன்பு என்னும் அணுக்குள் அமைந்த பேரொளியே.. அன்புருவமாக பரமசிவனே! என்று மகான் வள்ளலார் கூறியுள்ளார். சிவபெருமானை அன்பால் உணரலாம் என்று நம் மகான்கள் சொல்வது போல் தியானம் செய்யும் போது அன்பாக செய்ய முயற்சிக்கலாம்.
சர்வமும் அவனுக்குள் அடக்கம்
Source: சக்கர ஆற்றல்கள். வே. அரங்கன்